திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக மைதானத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தேசியகொடியை ஏற்றி வைத்து கூறியதாவாது. நாடு முழுவதும் கோவிட்-19 போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊழியர்கள் அதிகாரிகள் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தி அளித்து வருகின்றனர். அதற்காக தேவஸ்தானம் பல யாகங்கள், யக்ஞங்கள்,பாராயணங்கள், ஜபங்கள் நடத்தியது. தற்போது சுந்திரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. கோவிட்-19 விதிமுறைகளால் ஏழுமலையான் கோவிலுக்குள் அனைத்து உற்சவங்களும் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்தாண்டு பிரம்மோற்ஸவ விழாவும் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும். இம்முறை அதிகமாதம் வருவதால் நவராத்திரி பிரம்மோற்சவம் வருடாந்திர பிரம்மோற்ஸவம் என இரு பிரம்மோற்ஸவங்கள் நடக்கவுள்ளது. செப்.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவமும் அக்.,16 முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்ஸவங்களும் நடக்கவுள்ளது' என்று கூறினார்.