Type Here to Get Search Results !

காளி குழந்தாய், சொல்கிறேன் கேள், என்கிறாள் அன்னை.

      இந்த காலத்து இளைய தலைமுறையினருக்குக் காளியின் வடிவம் புரியாத ஒரு புதிராகத் தோன்றலாம். பயத்தையும. வெறுப்பையும் கூட உண்டு பண்ணலாம். என்ன இது, நிர்வாணமாக கரிய பெண் உருவம், கழுத்தில், துண்டிக்கப்பட்ட தலைகளை மாலையாக அணிந்திருக்கிறாள், ஒரு கையில் ரத்தம் ஒழுகும் ஒரு தலை, இன்னொரு கையில் ரத்தம் சொட்டும் கத்தி, பண்டைய காலத்திலிருந்தே சமயச் சின்னங்களுடைய தத்துவம், மக்கள் மனதில் பலவிதமான குழப்பங்களை உண்டு பண்ணி இருக்கிறது, அதுவும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நளினமாகவும், இனிமையாகவும் இருக்கும் வடிவமே மக்கள் மனத்தைக் கவரக் கூடியது. ஏதோ ஒரு வழிபாட்டு இயக்கத்தினர் காளியின் உருவத்தை விரும்பி அதன் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு காளிக்கு பூஜை செய்கின்றனர். சிலருக்குப் பயங்கரமாகத் தோன்றுவது மற்றவர்களுக்குப் பிடித்திருக்கலாம், சிலர் பக்தியோடு வழிபடும் வடிவங்கள் மற்றவர்களை அச்சுறுத்துவதாக இருக்கலாம். இயேசுவை, பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாகவோ, அன்புக்குருதி ஒழுகும் இதயத்தைத் திறந்து காட்டுபவராகவோ சித்தரிப்பதுண்டு, பக்தியுடன் வழிபடுபவர்கள் உண்டு. பயப்படுகிறவர்களும் உண்டு, 

    பொதுவாக இந்த மாதிரி சின்னங்களை எல்லாம் ஆழ்ந்து கவனித்து அவற்றின் உண்மையான தத்துவத்தை உணர்ந்து கொண்டோமானால் அவற்றிடமும் நமக்கு பக்தி ஏற்படும். கடல்நீர் தொலைவிலிருந்து பார்க்க கருநீலமாகவோ, பச்சை பசேலென்றோ தோன்றலாம். ஆனால் கடற்கரைக்கு வந்து பார்த்தால் அது நிறமற்றதாகவும், தெளிந்தாகவும் தெரியும். ஆகவே, காளியிடம் நெருங்கி வந்தால் தானே தெளிவு பிறக்கும். அவளுடைய மகிமை விளங்கும்.

      காலம், காலச்சக்கரம் என்பதோடு தொடர்புள்ள சொல் காளி, காலச்சுழற்சியின் சக்தியே காளி. எல்லாம் தோன்றுவதும், மறைவதும் அவளுக்குள்ளே தான். கீதையில் நானே காலச்சக்கரம் என்கிறார் கண்ணன். எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குப் பெரியதாகவும், காலப்போக்கில் விழுங்கி விடுவதாகவும் இருப்பது காலத்தின் சுழற்சி. யுகயுகமாக நடக்கும் நிகழ்ச்சி. சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கும். விட்டில் பூச்சியைப் போல் உடனுக்குடன் தோன்றி உடனுக்குடன் மறையும் உயிரினங்களுக்கு யுகயுகமாக நிகழும் பிரபஞ்ச வாழ்க்கை இனந்தெரியாத பயத்தை உண்டு பண்ணுவது இயற்கை தானே. இந்த பயம்தான் காளியிடம் நமக்கு.

     சித்திரங்களிலும், சிற்பங்களிலும், மற்ற சின்னங்களிலும் காளி உருவிற்குப் பின்னணியாக சுடுகாடோ, இடுகாடோ, போர்க்களமோ தோன்றும். சின்னா பின்னமான இறந்த உடல்கள் கிடக்கும். யாரையோ போருக்கு அழைப்பது போல் அவள் நின்று கொண்டிருப்பாள். ஓர் உடல் மீது நிற்பாள். அது பிணம் போல் கிடக்கும். அதை சிவன் என்பார்கள், மேனியெல்லாம் வெண்ணீறு பூசியவன். அவன் மீது அவள் கருநீல மேனியவளாய் நிர்வாணமாய் நிற்கிறாள். பல கரங்கள் சேர்ந்து ஓரளவுக்கு ஆடை போல் உடலை மறைக்கின்றன. தலை மாலையில் எண்ணிப்பார்த்தால், வெட்டுண்ட தலைகள் ஐம்பது. அவற்றில் சில மண்டை ஓடுகளாவும் இருக்கலாம், கலைந்து தொங்கும் கூந்தல் மிகவும் அடர்த்தியானது, முழங்காலுக்குக் கீழ் வரை தொங்கி ஓர் ஆடையைபோல் காட்சி தருவது, கண்கள் மூன்று, கைகள் நான்கு, அப்போதுதான் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று, ரத்தம் சொட்டச் சொட்ட, ஒரு மேல் கையில் காணப்படுகிறது, அந்தத் தலையை துண்டித்த வாள் அதற்கு மேலே தெரிகிறது. முகம் மிகவும் சிவந்து இருக்கிறது, ரத்த வெறி கொண்டவள் போல் நாக்கு நீண்டு கீழே தொங்குகிறது. பயப்படாதே, இதையெல்லாம் உனக்காகத்தான் செய்தேன். உனக்காக எதையும் செய்வேன். உன்னை அச்சுறுத்தும் இன்னல்களை முறியடிப்பேன் என்று கூறும் விதமாக அபய முத்திரையையும், வரத முத்திரையையும் மற்ற இரண்டு கரங்களில் தெரிகின்றன.

       பிரளயமே ஓய்ந்தது போன்ற காட்சி. தைத்திரீய உபநிஷதம் சொல்கிறது. கடவுள் இந்த உலகைப் படைத்து அதனுள் குடிகொண்டார். எனவே, இந்த உலகே கடவுளை மறைக்கும் ஒரு திரை ஆயிற்று. இந்தத் திரை கிழித்து எறியப்பட்டுவிட்டால் கடவுளின் உண்மை உருவம் தெரியும். அதை உணர்த்த தான் காளி நிர்வாணமாக காட்சி தருகிறாள். திகம்பர வடிவினள். அதாவது அகண்ட பரவெளியே அவளது ஆடை. தமோகுணத்தின் தத்துவமே அவள், பிரபஞ்சத்தில் தோன்றி, விரிந்து. பரந்து. இறுதியில் சூன்யத்தில் முடியும் நிகழ்ச்சியெல்லாம் தமோகுண ஆற்றலே, எல்லாம் முடிந்து இனிக் காண்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையான காரிருள் அவள் வண்ணம்.

     இடம், காலம், பொருள், காரண, காரியங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. நினைத்துப் பார்ப்பதற்க்குக் கூட எதுவுமில்லை. அத்தகைய காரிருள் தான் அவள்.

       ஏன் இவ்வளவு கரங்கள்? அதுவும் துண்டிக்கப்பட்ட கரங்கள்? ஒருவேளை இவையெல்லாம் நம்முடைய கரங்களைச் சித்தரிக்கின்றனவோ? நாம் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களை அவள் பெற்று மகிழ்ந்து உங்களுடைய கைகள் தான் எனக்கு மாலைகள் என்று சித்தரிக்கிறாளே? நீங்கள் கொண்டு வரும் பொருள்கள் இருக்கட்டும், உங்களுடைய அன்பைக் காட்டுகிறாளோ? தொண்டு செய்யும் உங்கள் கரங்கள் தான், மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவைதான், எனக்கு உகந்தது என்று அறிவுறுத்துகிறாளோ?

       ஒருவேளை ஆயிரமாயிரம் கரங்களோடு, பிரபஞ்ச நிகழ்ச்சிகளை நடத்தி முடித்த பின் மீண்டும் அவை தம் பணியைத் துவங்குமுன் அவள் சும்மா வைத்திருப்பதைக் காண்கிறோமோ? அவற்றை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வாளோ யாருக்குத் தெரியும். பரட்டை முடி. அதனால் அவள் முக்ததேசி. அவள் சுதந்திரமானவள். யாரும் அவளை உட்கார வைத்து தலைசீவி பின்னல் போட முடியாது.

       ஆமாம், ஐம்பது தலைகள் என்ன கணக்கு? எழுத்துக்கள் ஐம்பது என்பர், அவை குறிக்கும் சப்தங்கள் ஐம்பது. இதுதான் பிரபஞ்சத் தோற்றத்திற்கு அடிப்படை. பிரபஞ்சம் முடிந்துவிட்டது என்று காட்ட அவற்றை கழுத்தில் அணிந்திருக்கிறாள். மீண்டும் படைப்பு துவங்கியதும் அவையெல்லாம் அனைத்து உயிரினங்களின் முகங்களாக மாறும்,

       அச்சுறுத்தும் அம்சங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அன்னையின் அபய முத்திரை ஒன்றே நமக்குப் போதும் பயந்து நடுங்கும் குழந்தைகளாகிய நமக்கு நான் உனக்குத் தாய், அஞ்சாதே, என்கிறாள். வேண்டியது எல்லாம் வாங்கிக் கொள் என்று வரத முத்திரை செய்கிறாள்.
       அம்மா, இப்போது எங்கள் பயம் சிறிது தெளிந்திருக்கிறது. ஆனால் தங்கள் கணவரான சிவமஹாதேவனை காலடியில் மிதிக்கிறாயே. சிவனும் செத்துவிட்டானோ?

அதுவா குழந்தாய், சொல்கிறேன் கேள், என்கிறாள் அன்னை.

     உலகில் இருந்த எல்லா அரக்கர்களையும் கொன்று குவித்தேன். வெற்றிக் களிப்பில் தாண்டவம் செய்தேன். அந்த அதிர்ச்சியில் எல்லா உலகங்களும் நடுங்கின, நிலை குலைந்தன. என் வெற்றித் தாண்டவத்தை நிறுத்தும்படி சிவன் தலைமையில் எல்லா தேவர்களும் என்னை மன்றாடினர். நானோ வெற்றிக் களிப்பின் ஆனந்த மயக்கத்தில் மூழ்கியவளாக தொடர்ந்து ஆடினேன். உலகங்கள் உடைந்து, சிதறுண்டு, தவிடு பொடியாகி விடும்போல் இருந்தது. அதை தடுக்கத்தான் சிவன் என் காலடியில் வந்து படுத்துக் கொண்டார். என் தாண்டவத்தின் அதிர்வுகளைத் தானே தாங்கிக் கொண்டார், சவம் போல் கிடந்த சிவம் எல்லையில்லாத என் வேகத்தையும், ஆற்றலையும் தனக்குள்ளே உறிஞ்சிக் கொண்டார். திடீரென்று என் நாட்டியம் நின்றது. குனிந்து பார்த்தேன். ஐயோ, என் கணவர் உடல்மேல் அல்லவா குதித்துக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன். வெட்கிப்போய் என் நாவை வெளியே நீட்டினேன். நடந்தது அவ்வளவுதான்.

   காலமும், உருவமும், செயலும் கடந்த பிரம்மம் அல்லது பரம்பொருள் என்று சிவமஹாதேவனைச் சொல்வார்கள், இங்குச் சவமாக காளியின் காலடியில் கிடக்கிறார். காளிதான் அவருக்கு சக்தியும், ஆற்றலும் ஆவாள், ஆனால், சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவமில்லை. சிவத்தில் நிலைபெறுவதே சக்தி. சக்தியால் இயங்குவதே சிவன். சிவனுக்கும், சக்திக்கும் உள்ள தொடர்பின் தத்துவத்தை விளக்கத்தான் சிவன் நெஞ்சில் காளி நிற்கிறாள்.


     காளியின் தத்துவத்தைக் கேட்ட பிறகு இறையாற்றலின் அழிக்கும் சக்தியை மட்டும் சித்தரிக்கிறாள் காளி என்று தோன்றலாம். குறுகிய உலகவாழ்க்கைக்கு அப்பால் நாம் சிந்தனையைச் செலுத்தி பக்தியால் இறைவனிடம் ஒன்றுபடும் போது எல்லையில்லாத அமைதியும், பேரானந்தமும் ஏற்படும். அந்த நிலையின் வடிவம் தான் காளி, அந்த நிலையை மகாராத்ரி என்றும் சொல்லலாம். அந்த காரிருளில் இறையுணர்வைத் தவிர நமக்கு வேறு எந்த உணர்வும் இருக்காது. இப்போது நவீன மனவியல் நிபுணர்கள் பூமிக்குள் சிறிது ஆழத்தில் ஒரு பெட்டிக்குள் ஒருவரை கிடக்கச் செய்து சமாதி அனுபவத்தைத் தர ஒரு சோதனை நடத்துகிறார்கள். மூச்சுவிடுவதற்க்கு மட்டும் வசதி இருக்குமே தவிர எந்த ஒளியும், ஒலியும் புகாது, முழுமையான அந்தக் காரிருளின் நிசப்தத்தில் சிறிது நேரம் இருந்தால் நிறைய மனத்தெளிவு ஏற்படுகிறதாம். சமாதி நிலையை போல் சிறிது இறை அனுபவமும் ஏற்படலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.