Type Here to Get Search Results !

மங்களகரமான குரு பகவானின் வார விரதம்

   
            நவக்கிரகங்களில் நல்ல கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு. “குருவருள் இருந்தால் நமக்குத் திருவருள் கிடைக்கும்” என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும் என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்த திருவருளை கிடைக்க வைக்கும் குருவருளை நாம் பெற வேண்டுமானால் குரு வாரத்தில் விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வரவேண்டும்.
         
             நவக்கிரகங்களில் தெற்கு நோக்கியிருப்பவர் குரு. அந்தத் தென்முகக் கடவுளை நாம் இன்முகத்தோடு வழிபட்டால் நன்மைகள் வந்து சேரும். நாட்டை ஆளும் யோகம் முதல் வீட்டில் நிம்மதியாக வசிக்கும் யோகம் வரை அனைத்தும் குருவின் கையில் தான் இருக்கிறது.
          
            முற்காலத்தில் எல்லாம் ராஜாங்கத்தில் கூட குரு என்று ஒருவர் இருப்பார். அவரை “ராஜகுரு” என்று அழைப்பர். அவரிடம் செல்வது வழக்கம்.
         
           இப்பொழுதும் சில செல்வந்தர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப்படத்துறையை சார்ந்தவர்கள். ஒரு புது முயற்சியில் ஈடுபடும் பொழுது தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் பெரியோர்கள் சான்றோர்கள், ஆன்மீகப் பெருமக்கள் ஆகியோரிடம் அனுமதிக்கேட்டு செய்வதை அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.
          
          ஒருவர் ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால் செல்வாக்கு மிக்கவராகவும், செல்வம் மிக்கவராகவும் விளங்குவார். பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு கிட்டும். அஞ்சாது சபைகளில் பேசி ஆற்றலை வெளிப்படுத்துவார். புகழ்பெற்ற மனிதர்களின் வரிசையிலும் இடம் பிடிப்பார்.
         
          பொன்னவன் என்றும், மன்னவன் என்றும் வர்ணிக்கப்படும் குரு, நீச்சம் பெற்ற ஜாதகம் அமைந்தவர்கள் நினைத்தது நடப்பதில் தாமதம் ஏற்படும். நீடித்த நோயில் சிக்கித் தவிக்கலாம். நிலையான தொழில் அமையாது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக வழிபாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
          
         “வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே” என்ற குரு கவசப்பாடலை படித்து வழிபடலாம். சுண்டல் நைவேத்தியத்தால் தொல்லைகளைத் தீர்ப்பவன் குரு, யானையை வாகனமாகப் பெற்றதால் குருவருளைப் பெற விரும்புவோர் யானைக்கு உணவு, கரும்பு, பழம் போன்றவற்றை கொடுத்தும் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளலாம். தானியங்களில் கொண்டக்கடலை அவருக்கு உகந்தது. திருமண காரியங்கள் முடிய வேண்டியவர்கள் கொண்டக்கடலையை மாலையாக்கி அணிவித்து வழிபடலாம். மற்றவர்கள் தானியத்தை தானமாக வழங்குவதே நல்லது.
          
           பஞ்சமுக விளக்கேற்றி, பஞ்ச எண்ணெய் ஊற்றிப் பஞ்சுத்திரியால் ஐந்து முகம் விளக்கேற்றி நெஞ்சம் மகிழ மாலை நேரத்தில் வழிபட்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். அஞ்சும் வாழ்க்கை மாறும். அடுத்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். குருவின் நேர் பார்வையில் நின்று கீழ்கண்ட பாடலை பாடுவது நல்லது.
            
       பொருளோடு புகழைத் தந்து
            போற்றிடும் வாழ்க்கைத் தந்து
            வருங்காலம் அனைத்தும் செல்வம்
            வரும் காலம் ஆக்கி வைத்து
            பெருமைகள் வழங்கி நாளும்
            பேரருள் கூட்ட வேண்டி
            அருள்மிக குருவே உன்னை
            அடிபணிந்து போற்றுகின்றேன்.
    என்று அவர் சந்நிதியில் பாடினால் அன்று முதல் அனுகூலங்கள் ஆரம்பமாகும்.

            
       குரு வழிபட்டால் மஞ்சள் வண்ணமும் அன்னதானமும் மிகவும் முக்கியமானதாகும். வழிபட்டால் கலந்து கொள்பவர்கள் மஞ்சள் வண்ணம் கலந்த ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. அட்சதை தூவி ஆசி வழங்குவதில் கூட அரிசிக்கு மஞ்சள் வண்ணம் பூசுவது “குருவருள்” கிடைப்பதற்காகதான். எனவே குரு சந்நிதியில் நிற்கும் போது அதற்குப் பிரியமான பொருட்களை நாம் உபயோகித்தால் குருவின் பார்வையால் குலம் தழைக்கும். நலம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகளும் நல்ல முடிவிற்கு வரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.