சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நேற்று சமூக இடைவெளியுடன் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி மாதங்களில் 11 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா நேற்று தொடங்கியது.
திருவிழா கொடியேற்றம் கரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. அதிகாலையில் முத்திரி பதமிட்டு திருநடை திறக்கப்பட்டது.
பின்னர் அய்யாவிற்கு பணிவிடையும், அதைத்தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், திருக்கொடியேற்றமும் நடைபெற்றது. பாலபிரஜாபதி அடிகளால் திருக்கொடியை ஏற்றி வைத்தார். பதி நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் குறைந்த அளவில் பங்கேற்றனர்.
விழாவையொட்டி மதியம் வடக்கு வாசலில் பணிவடையும், மாலையில் அய்யாவிற்கு பணிவிடையும், நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை, மற்றும் மாலையில் பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெறவுள்ளது. வருகிற 28ம் தேதி 8ம் திருவிழாவும், 31ம் தேதி 11ம் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
விழாவின் அனைத்து நிகழ்வுகளும் சமூக இடைவெளியுடன் அரசின் வழிகாட்டு விதிமுறைகளின் படி நடத்துவதற்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.