Type Here to Get Search Results !

ராமர் கோயில் பூமி பூஜையை காணொலியில் நடத்துங்கள்: உத்தவ் தாக்கரே



லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ராமர் கோயில் பூமி பூஜைக்கு செல்ல ஆர்வமாக இருப்பதால் அவர்கள் புறப்பட்டு வந்துவிடுவார்கள் என்பதால் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டு பூமி பூஜைக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறக்கட்டளையின் பொருளாளர் தெரிவித்தார். இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அந்தக் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடத்தப்பட வேண்டும். இது மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள். ஆனால் இந்தப் பெருமைமிகு பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி மூலம் நடத்த வேண்டும். இந்தப் பூமி பூஜைக்குச் செல்ல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நாம் கொரோனா வைரஸ் அங்கு பரவுவதை அனுமதிக்கலாமா? ராமர் கோயில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நிறைவேறுகிறது. இது மற்ற கோயில்களைப் போல் சாதாரணக் கோயில் அல்ல.

இன்று நாம் கொரோனா வைரசுடன் போராடி வருகிறோம். மதரீதியான கூட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலால் தடை செய்யப்பட்டுள்ளன. என்னால் கூட அயோத்திக்குச் சென்று ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். ஆனால், லட்சக்கணக்கான ராம பக்தர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தாங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என நினைத்துப் புறப்பட்டால் அவர்களை உங்களால் தடுக்க முடியுமா?. பூமி பூஜையை காணொலி மூலம் நடத்தலாமே. ராமர் கோயில் என்பது நம்பிக்கை சார்ந்தது. அங்கு செல்லும் மக்களை எப்படி உங்களால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.