Type Here to Get Search Results !

மிதுன ராசி பலன் - 2016



இது புதனின் வீடு என்பதால் இவர்கள் அதிகமான எண்ணங்களையும்,நோக்கங்களையும் பெற்று இருப்பார்கள்.கல்வியில் தேர்ச்சியும்,சிரித்துப் பேசும் குணமும் கூடவே சற்று தந்திரங்களுடனும் கபடங்களுடனும் காணப்படுவார்கள்.சுயநலக் கரியவதிகலாக இருப்பார்கள்.பித்த சம்மந்தமான வியாதிகளால் பிற்காலத்தில் பெரிதும் அவதிப் பட நேரிடலாம்.தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும்,கறாரும் நிறைந்து இருக்கும்.கதைகள் சொல்வது,கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.கிரக பலம் நன்றாக அமைந்தால் ஆயுள் பலன் 73 வரை எனலாம். இவர்கள் கடும் உழைப்பாலும் தங்களது சொந்தத் திறமையினாலும் முன்னேறுவார்கள்.

2016 ஆம் ஆண்டிற்கான மிதுன ராசியின் பலாபலன்கள்

அன்பான மிதுன ராசி அன்பர்களே இந்த ஆண்டு முழுவதுமே சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். இதனால் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் வெற்றி அடையும். எதிரிகள் பயம் நீங்கும். பொருளாதார வளமும் உண்டு. 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். இந்தக் கால கட்டம் மட்டும் மேற் சொன்ன நல்ல பலன்கள் குறையலாம். இந்தக் கால கட்டம் மட்டும் நீங்கள் கவனமாக இருங்கள். அப்படி நீங்கள் கவனமாக இருந்தால் மன உலைச்சலையும், உறவினர் வகையில் வீண் மனக் கசப்பையும் தவிர்க்கலாம். இந்தக் காலம் மட்டும் தவறான வார்த்தைகள் ஏதும் வாயில் இருந்து வராமல் பார்த்துக் கொள்ளவும்.

இது தவிர 8.1.2016 அன்று நடக்க விருக்கும் ராகு/ கேது பெயர்ச்சி பலன்களைப் பார்க்கும் போது. ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமாகத் தான் அமைந்து உள்ளது. ராகு 4 ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு 3 ஆம் இடமான சிம்ம ராசிக்கு வருகிறார். இதனால் பொருளாதார வளம் மேம்படும். செய்யும் தொழில் அபிவிருத்தி உண்டு. ஆனால் அதே சமயத்தில் கேது உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்குப் போகிறார். கேதுவைப் பொருத்தவரை அது சிறப்பான இடம் இல்லை தான் என்றாலும், முன்பு இருந்த டென்ஷன் குறையும். மற்றபடி பொருள் இழப்புக்கள் ஏற்படாமல் இருக்க, குறிப்பாக வீட்டில் திருடு போகாமல் இருக்க விநாயகரை பூஜை செய்து வாருங்கள். சுருங்கச் சொன்னால் கேது உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் ராகு உங்களுக்கு பல நன்மைகளை இந்த ஆண்டு செய்து வருவார்.

இந்த ஆண்டின் பெரும் பகுதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக நான்காம் இடம் குரு பகவானுக்கு ஏற்ற இடம் இல்லை தான். இதனால் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும், பகையும், வீண் அலைச்சலும், சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமலும் போகும். என்றாலும் கவலை கொள்ள வேண்டாம் குரு பகவான் 7.2.2016 முதல் 20.6.2016 வரையில் வக்கிரம் அடையும் காலம் ஓரளவு நல்ல பலன்களைத் தரும். இக்காலக்கட்டத்தில் தீவீர முயற்சி செய்தால் எதிலும் அமோக வெற்றி கிடைக்கும். எனினும் வீண் வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அது போல குரு பகவானின் பார்வை உங்களுக்கு நல்லது செய்யும். 4 ஆம் இடத்து குரு பகவான் உங்களது ராசிக்கு 8,10,12 ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபச் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் தவிர்க்க முடியாது தான். தொழில் ரீதியாக அலைச்சலுக்குப் பிறகு வெற்றி உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பார்கள். ஆனால் அலைச்சல் அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை உண்டு. மேல் அதிகாரிகளுடன் அனுசரித்துப் போனால் தேவையற்ற இட மாற்றத்தை தவிர்க்கலாம். காரணம் இந்த ஆண்டு பெரும்பாலான மிதுன ராசிக் காரர்கள் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரியவும் கூட நேரிடலாம்.

வியாபாரிகள்

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. ஆனால் நீங்கள் பணத்தை கவனமுடன் கையாளுங்கள். நம்பியவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள். பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணம் இருப்பது போல காண்பித்துக் கொள்ளாதீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு லாபங்கள் வரும் ஆனால் பணத்தால் பல புதிய விரோதிகள் உருவாகும் ஆண்டு. புதிய வியாபாரம் தொடங்குவதாக இருந்தால் வருடத்தின் முற்பகுதியில் கொஞ்சம் தள்ளிப் போடுதல் நலம். வருடத்தின் பிற்பகுதியில் புதிய தொழிலை தொடங்கலாம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை அவ்வளவு எளிதாகப் பெற இயலாது. அதிகம் முயற்சி எடுத்தே முன்னேறும் காலமாக இருக்கும். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். அரசு அங்கீகாரம் கிடைக்கத் தாமதம் ஆகும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டு சுமாரான பலன்களை தான் தரும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு கிடைக்காமல் போகாது. ஆனால் தாமதம் ஆகும். வருடத்தின் முற்பகுதி அதிக மந்த நிலையைத் தரும். பிற்பகுதியில் யோகம் உண்டு. உழைப்புக்குத் தகுந்த மதிப்பு கிடைக்கும். மற்றபடி பெண்களால் அவமானம் ஏற்படும். காதல் விவகாரங்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். கவனம்.

விவசாயிகளுக்கு

விவசாயம் செய்பவர்கள் பணத்தை இந்த ஆண்டு கவனமாகக் கையாளுங்கள். அரசு ஆதரவு எதிர்பார்க்க இயலாது. ஆனால் கால் நடை வளர்ப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் ஆண்டாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது கவனமுடன் வில்லங்கம் பார்த்து வாங்கவும்.

பெண்களுக்கு

பெண்கள் அவசியம் உங்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் காரணம் நீங்கள் அத்தியாவசிய செலவுகளுக்கே திக்கு, முக்காடிப் போகும் ஆண்டு. அதாவது பொருளாதார சிக்கல் அதிகம் இருக்கும். கேதுவால் மருத்துவ செலவுகள் கூடும். எனினும், பிள்ளைகளால் பெருமை உண்டு. கணவரின் அன்பு கிடைக்கும்.

பரிகாரம்

அவசியம் திருநாகேஸ்வரம் சென்று வாருங்கள். ராகு காலத்தில் துர்கை வழிபாடு வெற்றியைத் தரும்.


பொது

பெயரின் முதல் எழுத்துக்கள் Kaa, Kee, Koo, Gh, Ang, Chh, Ke, Ko, Haa

அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் மரகதம்

ராசியான எண்கள் அல்லது தேதிகள் 3,12,30

வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள்

ராசியான நிறம் பச்சை, மஞ்சள்

ராசியான திக்கு வடகிழக்கு, வடக்கு

ஆகாத நிறம் கரும் சிவப்பு


பின் குறிப்பு


இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.