மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களுல் நவராத்திரி விழா மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. உமா தேவியை பல்வேறு ரூபங்களில் வழிபடும் பண்டிகையே நவராத்திரி. அறிவியர் பூர்வமாகவும், பூராணக் கதைகளை சொல்லும் வகையிலும் நவராத்திரி பண்டிகை அமைந்துள்ளது.
புரட்டாசி மாதம் பிரதமை திதி (சுக்கிலபட்ச முதல் நாள்) முதல் ஒன்பது நாட்கள் வரை நவராத்திரி பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும், கர்நாடகத்தில் தசரா என்றும் வட மாநிலத்தில் பூஜா விழா என்றும் பெயரிட்டு இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
எருமை வடிவம் கொண்ட மகிஷாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி வந்தான். தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் மக்கள் முறையிட்டனர். மக்களின் வேண்டுகோளுக்கினங்க அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி கொண்டாள். அந்த வெற்றியே நவராத்தி விழாவாக மக்காளால் கொண்டாப்படுகிறது.
நவராத்தியின் ஒன்பது நாட்களில் ஒவ்வொரு மூன்று நாட்களையும் முப்பெரும் பெண் தெய்வங்களான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் ஒவ்வொரு ரூபங்களில் வழிபடுகிறார்கள். துர்க்கை வீரத்திற்கும், லட்சுமி செல்வத்திற்கும், சரஸ்வதி கல்விக்கும் உரிய தெய்வங்கள் என்பதால், இவர்களை வழிபட இந்நவராத்திரி ஏற்பட்டது. அதன்படி, முதல் மூன்று நாட்கள் வெற்றியைத் தர வேண்டி துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி லட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.
பத்தாம் நாளான விஜயதசமி அன்று புதிய தொழில்களையும், படிப்பையும் துவக்கினால் வளர்ச்சி ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நவராத்திரி நாட்களில் பெண்கள் ஆர்வத்துடன் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஒன்பது நாளும் பராசக்தியை விதவிதமாக அலங்கரித்து விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். தமிழகத்தில் கொலு வைக்கும் வழக்கம் உள்ளது. விதவிதமான பொம்பைக் கொலு வைத்து சிறு குழந்தைகளையும், பெண்களையும் அழைத்து மங்கலப் பொருட்களுடன், 9 நாட்களும் ஒவ்வொரு வகையான தானியங்களை படைத்து, அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு விதமான நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும், ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும், தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக சக்தி ஆலயங்களில் இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி ஏராளமானோரால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் தனிச்சிறப்பு பெற்றது. இத்திருத்தலம் 21 சித்தர்கள் அடங்கிய பெருமைக்குரியது. இங்கு அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறாள். புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருட்கடாக்ஷத்தை பெறுகின்றனர்.
நவராத்திரி கொலு அமைக்கும் முறை
* முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.
* இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
* மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
* நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
* ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
* ஆறாம்படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
* ஏழாம்படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
* எட்டாம்படி: தேவர்கள், அட்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
* ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை
* முதலாம் நாள்: முதல் நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை நீதியைக்காக்கவே இவள் கோபமாக காட்சியளிக்கிறாள்.